சிட்டம்மா ரசம் வைக்கிறதையே கொட்டக் கொட்டப்பாத்துக்கிட்டிருக்கா எமிலி. எப்பிடியாச்சும் அந்த 'சூப்பு' வைக்கிற சூத்திரத்தக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு.
இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சிட்டா சிட்டம்மா. குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுளி எடுத்து, ஒரு தக்காளியும் சேத்துக் கரகரன்னு கரைச்சு ஊற வச்சா. அதுல உப்புத்தூளை அள்ளி எறிஞ்சா. அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா. மிளகு சீரகம் ரெண்டையும் அம்மில வச்சு நச்சு நச்சுன்னு நசுக்குனா. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிறமாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா. மூணையுமமொண்ணு சேத்தா. வடச்சட்டியில கடலெண்ணைய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா. கடுகு உளுந்தம்பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணை மேல. அதுக சட்டுபுட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக. இப்ப... கிள்ளி வச்ச பட்டமொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா. நான் கறுப்பாப் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னடும் நிறுத்திட்டா. நசுக்கி வச்ச மிளகு சீரகம் பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா.
அட்டத்துல நின்னு எல்லாத்தையும் எட்டி எட்டிப் பாத்துக்கிட்டிருக்கா எமிலி. 'இது என்ன இது அமெரிக்கா அறியாத கூத்து'ன்னு ஆச்சரியப்பட்டு நிக்கிறா.
இப்ப... கரைச்சு வச்ச புளித்தண்ணிய எடுத்தா சிட்டம்மா. அதுல பொதுக்குன்னு கையவிட்டுக் கொதுக்குகள ஒதுக்கிப் புழிஞ்சு எறிஞ்சா. அடுப்புச் சட்டியில ஊத்துனா புளித்தண்ணிய.
மாமியா மாதிரி தகதகன்னு எரிஞ்சுக்கிட்டிருந்த நெருப்பப் புதுப் பொண்ணு மாதிரி அடக்கி வாசிக்க வச்சா. ஒரே சீரா எரிச்சா. அது பொதுபொதுன்னு சூடாகி பொத்துனாப்புல நுரை கட்டவும் ஒரு மல்லித்தழைய உள்ள போட்டுக் கொதிக்குமுன்ன எறக்கிட்டா. ஆவி பறக்காம மூடி போட்டு ஒரு ஓரமா வச்சுட்டா.
"செய்முறை இருக்கட்டும். ரசம் என்ற பானத்துக்குள் இத்தனை உள்ளீடுகளா?" திக்கு முக்காடித் திகைச்சுப் போனா எமிலி.
"மூன்றாம் உலகப்போர்"
- நாவலில் கவிஞர் வைரமுத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக