முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் :

ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும்.

உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி.

கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது?

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

அணிச்சுட்டல் :

    இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது.

அணியிலக்கணம் :

    ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும்.

குறள் விளக்கம் :

    வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.

பொருத்தம்

உவமானம் :

        "கொக்கொக்க கூம்பும் பருவத்து"
    வாய்ப்பற்ற காலத்தில் கொக்கு, அமைதியாக காத்திருந்து, காலம் வாய்த்ததும் விரைந்து செயலை முடிக்கும்.

உவமேயம் :

        "அது குத்தொக்க சீர்த்த இடத்து"
    ஒருவன் வாய்ப்பற்ற காலத்தில் அமைதியாக காத்திருந்து, காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயல்பட வேண்டும்.

உவம உருபு :

        "மற்று"  ( போல )
   
    மேற்கண்ட பொருள் விளக்கம் மிகச்சரியாக உள்ளது. ஆனால், அணிக்கான பொருத்தம் சரியாக விளக்கப்படவில்லை. ஏனெனில், உண்மையில் இந்த குறளில் இரண்டு உவமானம் மற்றும் இரண்டு உவம உருபுக்கள் அமைந்துள்ளன.

        இங்கே இருமுறை இடம்பெற்றுள்ள, ' ஒக்க' என்ற உவம உருபு கவனிக்கப்படவில்லை.

            கொக்கொக்க கூம்பும் பருவத்து-
                வாய்ப்பு குறைவான நேரத்தில், கொக்கைப்போல் (கவனமாகவும், தயாராகவும்) காத்திருத்தல் வேண்டும்.

            மற்றதன் = மற்றும்+அதன் = மேலும் அதன்

            குத்தொக்க சீர்த்த இடத்து-
                வாய்ப்பு கிடைத்தவுடன் கொக்கின் குத்து போல (ஆற்றலோடும், துல்லியமாகவும்) விரைந்து செயல்படவேண்டும்.

    மேலும், இங்கே உவமேயம் நேரடியாகத் தென்படவில்லை. எனினும், உவம உருபுக்கள் அமையப்பெற்றுள்ளதால் இரண்டு உவமைகள் அணி செய்வதாகக் கொள்ளலாம்.

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?