"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?
குறள் வெண்பா என்ற பா வகையைச் சேர்ந்த திருக்குறளின் 1330 செய்யுள்களில், முதல் செய்யுள் இதுதான். மேலும், தமிழின் முதல் எழுத்தாகிய 'அ' என்னும் எழுத்துடன் தொடங்குகிறது.
பொதுவாக, தமிழ் நூலாசிரியர்கள், நூலின் முதல் சொல்லை, நற்சொல்லாக ( மங்கல வார்த்தை ) தொடங்குவார்கள். எடுத்துக்காட்டாக, உலகம், வானம், மழை, மேகம், கடவுளரின் பெயர்கள் போன்றவை. ஆனால், திருவள்ளுவர் அகரம் என்ற சொல்லையே மங்கலச் சொல்லாக பயன்படுத்தியுள்ளார். அகரம் (அ+கரம்) என்றால், 'அ' என்னும் எழுத்து. கரம் என்பது குறில் எழுத்துக்களுடனும், காரம் என்பது நெடில் எழுத்துக்களுடனும், ஏனம் என்பது மெய்யெழுத்துக்களுடனும் சேர்த்து உச்சரிக்கப்படும்.
[ எடுத்துக்காட்டு : டாகாரம் = 'டா' என்னும் எழுத்து ; ஃகேனம் = ' ஃ ' என்னும் எழுத்து ; ங்கேனம் = 'ங்' என்னும் எழுத்து ; ச்சேனம் = 'ச்' என்னும் எழுத்து. ]
ஆனால், வடமொழி என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருதத்தில் 'அ' என்னும் எழுத்து நற்சொல்லுக்கு எதிரான சொல்லை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
[ எடுத்துக்காட்டு : அ+மங்கலம் = அமங்கலம் ; அ+சுபம் = அசுபம் ; அ+சுரர் = அசுரர் ]
குறிப்பு : சுரர் என்பது ஆரியர்களைக் குறிக்கிறது. அசுரர் என்பது ஆரியர் அல்லாதோரைக் குறிக்கிறது.
தமிழில், 'நல்லது' என்ற சொல்லுக்கு எதிர்ப் பதமாக, 'அல்லது' என்ற சொல் கையாளப்படுகிறது. 'பகல்' என்ற சொல்லுக்கு 'அல்' என்ற சொல் உள்ளது. எனினும், 'அல்லது', 'அல்' போன்ற சொற்கள் பிரிக்க இயலாத சொற்களாக உள்ளன.
இதுவரை நூலாசிரியர்கள் பயன்படுத்திய நற்சொற்களிலேயே, அகரம் என்ற சொல், எந்த அளவுக்கு உயர்ந்தது என்று பார்க்கலாம்.
ஏழாவது குறளில், இறைவனை, 'தனக்கு உவமை இல்லாதான்' என்று சொல்கிற வள்ளுவர், முதல் குறளிலேயே, அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறுகிறார்.
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் தொடக்கமாக இருப்பதுபோல், உலகத்திற்கு இறைவன் தொடக்கமாக உள்ளான். [ செய்யுளில், போல என்ற உவம உருபு மறைந்து வருவதால், இதில் பயின்று வரும் அணி, எடுத்துக்காட்டு உவமையணி ஆகும். ]
மிக உயர்ந்த 'அகரம்' என்ற சொல்லில் தொடங்கினால் போதுமா? வள்ளுவரல்லவா? 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்றவரல்லவா?
அடுத்துவரும், "முதல், எழுத்து, எல்லாம், ஆதி, பகவன், உலகு" என்று எல்லா சொற்களையும் நற்சொற்களாகவே அமைத்து நம்மை வியக்கவைக்கிறார் நம் தெய்வப்புலவர்.
நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக