நம்முடைய பள்ளிப் பாடப்புத்தகத்தில், ஹமுராபி என்ற மன்னரைப்பற்றி சில வரிகள் படித்திருப்போம். பாபிலோனின் அரசரான ஹமுராபி, அவருடைய பெருமைமிகு சட்டங்களால் வரலாற்றில் நிலைபெற்று வாழ்கிறார். இந்த உலகம் அறிந்த வரை, உலகத்தின் மிகப் பழமையான ஆவணப்படுத்தப்பட்ட சட்டங்கள், ஹமுராபியின் சட்டங்களே.
வரலாற்று ஆசிரியர்கள், "கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்" என்ற நீதியை தூக்கிப்பிடிக்கும் சமத்துவச் சட்டத்திற்காக, ஹமுராபியை 'ஆஹா.. ஓஹோ' என்று புகழ்கின்றனர். இவ்வளவு புகழ்பெற்ற ஒரு மன்னரின் சட்டங்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொண்டால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு வலதுசாரியாய் இருந்தால்.
கி,மு 1810 ஆம் ஆண்டு, பழைய பாபிலோனிய அரசின் அரசரான சின்-முபாலியட்டின் மகனாகப் பிறந்தார் ஹமுராபி. கி.மு 1792 ஆம் ஆண்டு, தந்தையிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றினார். கி.மு 1750ல் இறக்கும்வரை, 42 ஆண்டு காலம் பாபிலோனின் பேரரசராக இருந்தார். பல சிற்றரசுகள், பிரதேசங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி மெசபடோமிய சமவெளி முழுவதையும் பாபிலோனின் கீழ் கொண்டுவந்தார். கி.மு 1776 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய நகரமாக பாபிலோன் விளங்கியது. அன்றைய பாபிலோனின் மக்கள் தொகை 10 இலட்சங்களாக இருந்தது. இன்றைய ஈராக்கின் பெரும்பகுதியும், ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளும் பாபிலோன் பேரரசின் கீழிருந்தன.
ஹமுராபி அமோரிட் வம்சத்தைச் சேர்ந்தவர். அமோரிட் என்பது அன்புக்கான ரோமானிய கடவுள். அதாவது ரோமசாமி. ஆனால், ஹமுராபியின் காலத்தில் மர்டக்(மார்டுக்) எனும் பாபிலோனிய தெய்வம் பிரபலமாக இருந்தது. பாபிலோனிய மக்களை ஹமுராபியிடம் ஒப்படைத்தது இந்த 'மர்டக்' தான். என்லில் என்னும் தெய்வம் தன்னை வழி நடத்தியதாக தன்னுடைய சட்ட புத்தகத்தின் இறுதியில் ஹமுராபி தெரிவிக்கிறார். இப்படி பல கடவுள்களால் தயாரிக்கப்பட்ட சட்டங்களை "சாமாஷ்" என்னும் கடவுள் ஹமுராபியிடம் ஒப்படைத்தது. இவற்றையே நாம் "ஹமுராபியின் சட்டங்கள்" என்று கூறுகிறோம்.
சாமாஷ் கடவுளிடம் சட்டங்களை பெறுகிறார் ஹமுராபி |
இவற்றில் உள்ள 282 சட்டங்களில், ஒருசிலவற்றை இங்கே காண்போம்.
சட்டம் 196 : கண்ணுக்குக் கண் பிடுங்கப்படுதல் வேண்டும்.
சட்டம் 197 : ஒருவன், ஒருவனுடைய எலும்பை முறித்தால், அவனுடைய எலும்பும் முறிக்கப்பட வேண்டும்.
சட்டம் 218 : மருத்துவரின் தவறான சிகிச்சையால், ஒருவன் பலத்த காயம் அடைந்தாலோ, பார்வை இழந்தாலோ, மரணம் அடைந்தாலோ, மருத்துவரின் விரல்கள் வெட்டப்படும்.
இவையே மிகவும் கவனமாக நம் பாடநூல்களில் இடம் பெறச்செய்யப்பட்ட சட்டங்கள். நாம் இன்னும் கொஞ்சம் உள்ளே போய் ஆராயலாம்.
உண்மையில், சட்டம் 196 சொல்வது இதுதான் : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், உயர் வகுப்பைச் சேர்ந்த இன்னொருவனின் கண்ணை குருடாக்கினால், அவனுடைய கண்ணும் குருடாக்கப்படும்.
அதேபோல், சட்டம் 197 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், உயர் வகுப்பைச் சேர்ந்த இன்னொருவனின் எலும்பை உடைத்தால் அவனுடைய எலும்பும் உடைக்கப்படும்.
அதேபோல், சட்டம் 198 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஒரு சாமானியனின் கண்ணை குருடாக்கினால் அல்லது எலும்பை உடைத்தால், அவன் 60 ஷெகெல் எடை கொண்ட வெள்ளியை பாதிக்கப்பட்டவனுக்குத் தரவேண்டும்.
சட்டம் 199 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், உயர் வகுப்பைச் சேர்ந்த இன்னொருவனின் அடிமையின் கண்ணை குருடாக்கினால் அல்லது எலும்பை உடைத்தால், அவன், அடிமையின் விலை மதிப்பில் பாதியை உரிமையாளனுக்குத் தரவேண்டும். (அடிமைக்கு அல்ல)
சட்டம் 209 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஓர் உயர் வகுப்பு பெண்ணை அடித்து, அதனால் அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவன் 10 ஷெகெல் வெள்ளியை அவளுக்குத் தர வேண்டும்.
சட்டம் 210 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஓர் உயர் வகுப்பு பெண்ணை அடித்து, அதனால் அவள் இறந்துவிட்டால், அவனுடைய மகளும் கொல்லப்படுவாள். (மகள் செய்த தவறு ?)
சட்டம் 211 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஒரு சாமானியப் பெண்ணை அடித்து, அதனால் அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவன் 5 ஷெகெல் வெள்ளியை அவளுக்குத் தர வேண்டும்.
சட்டம் 212 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஓர் உயர் வகுப்பு பெண்ணை அடித்து, அதனால் அவள் இறந்துவிட்டால், அவன் 30 ஷெகெல் வெள்ளியை அவளுடைய கணவனுக்குத் தர வேண்டும்.
சட்டம் 213 : உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவன், ஓர் உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவனின் அடிமைப் பெண்ணை அடித்து, அதனால் அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவன் 2 ஷெகெல் வெள்ளியை உரிமையாளனுக்குத் தரவேண்டும்.
சட்டம் 214 : ஒருவேளை அந்த அடிமைப்பெண் இறந்துவிட்டால், அவன் 20 ஷெகெல் வெள்ளியை உரிமையாளனுக்குத் தரவேண்டும்.
போதும் போதும் என்று இருக்கிறதா? சட்டம் 218 பார்த்தோமல்லவா? அப்படியே 219 என்ன சொல்கிறது என்றும் பார்த்துவிடலாம்.
சட்டம் 219 : மருத்துவரின் தவறான சிகிச்சையால், ஒரு அடிமை இறந்துவிட்டால், உரிமையாளருக்கு, இன்னொரு அடிமையை வாங்கித்தர வேண்டும்.
இவைபோன்ற சட்டங்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்று நமக்கு பிரமிப்பாக இருக்கிறதல்லவா? உண்மையில், வியப்படைவதற்கு ஒன்றுமே இல்லை. எப்போதும், கடவுளின் பெயரால் செய்யப்பட்ட சட்டங்கள், திட்டங்கள், உத்தரவுகள், செயல்முறைகள் மற்றும் தண்டனைகள் அனைத்தும் மக்களின் கேள்விகளுக்கு உட்பட்டவை அல்ல.
ஆட்சியாளர்களை நம்பிய செல்வந்தர்களும், கடவுளை நம்பிய ஆட்சியாளர்களும் கைவிடப் படார்.
கருத்துகள்
கருத்துரையிடுக