" நான் வந்துட்டேன்னு சொல்லு "
என்று சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்ததும் அரங்கமே அதிர்கிறது.
என்ன காரணம்?
அவரது ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களைப் பற்றி பணம் பண்ணும் கும்பல் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
எனவேதான், 'பஞ்ச்' வசனங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படுகிறது.
இப்போதெல்லாம், சூப்பர் ஸ்டார், மேடைகளிலும் நுட்பமாகப் பேசுகிறார். அப்படிப்பட்டதுதான், 2017இன் கடைசிப் பேச்சு. அதாவது,
" 1996 லேயே பதவி என்னைத் தேடி வந்தது " என்றார். கலைஞரும் ஐயா மூப்பனாரும், ' நீங்கள்தான் முதல்வர் பதவிக்கு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் ' என்று கேட்டது போலவும், ' பதவியெல்லாம் எனக்கு வேண்டாம் ' என்று இவர் மறுத்தது போலவும் பேசினார். உண்மையில், அவர் பதவி பற்றி பேசியிருந்தால், தமிழகத்தின் தலைசிறந்த அரசியல்வாதிகளால் கட்டம் கட்டப்பட்டு, முகவரியில்லாமல் ஆக்கப்பட்டிருப்பார்.
ஆன்மீக அரசியல் பற்றிய பேச்சே எழுந்திருக்காது.
'1996-ல் ரஜினி சொன்னதால்தான் மக்கள், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்' என்று ஒரு பொய்ச்செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவாக இருந்தது?
1991-96 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சி, தமிழக மக்களின் கழுத்தை நெரிப்பதாகவே இருந்தது. சசிகலாவின் குடும்பத்தினரால் தமிழ்நாடு சூறையாடப்பட்டது. ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர். எந்தப் பைத்தியக்காரனுக்கும் ஜெயலலிதாவுக்காக வாக்கு கேட்கும் துணிச்சல் வரவில்லை என்பதே உண்மை.
மீண்டும் 2001, 2011, 2016ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது எப்படி? ஜெயலலிதாவுக்காக ரஜினி பிரச்சாரம் செய்தாரா?
எப்போது எப்படி வாக்களிக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர்கள் தமிழக மக்கள் என்பது ரஜினியை இயக்குபவர்களுக்கும் தெரியும்.
ரஜினி ஏன் எப்போதாவது மட்டுமே குரல் கொடுத்தார்? என்ற கேள்விக்கு விடையளிக்க, பெரிய பொருளாதார நிபுணர்களும் ஆடிட்டர்களும் தேவையில்லை.
விடை எளிது.
ஜெயலலிதாவிடத்தில், மன்னார்குடியின் செல்வாக்கு அதிகரிக்கும் போது, ரஜினியின் குரல் வெளிப்படும். மயிலாப்பூரின் செல்வாக்கு உயரும்போது, குரல் அடங்கிக்கிடக்கும்.
'' சோ... There is nothing in voice of Rajini "
கருத்துகள்
கருத்துரையிடுக