காட்டு நதி
இந்தப்பயணம் குறிக்கோளில்லாமல்
தொடங்கியதுதான்.
---------
என்னைப்பெற்றெடுத்த
புனித வயிறு, சிறு
குன்றுதான் என்றாலும்
எனக்கதுதான் இமயம்.
---------
காதலனுடன் ஓடிவந்த
கன்னிப்பெண்ணின்
பயம் கலந்த ஆர்வம்,
நான் ஓடிவந்தபோது
எனக்குமிருந்தது.
பாறைகளில்
குதித்தோடி வந்த எனக்கு,
மலையடிவாரம்
முடிந்ததும்
திசை தெரியவில்லை.
சரிவுகளில்
திசை திருப்பப்பட்டேன்.
சமவெளிகளில்
மனம் போனபடி
பயணம் செய்தேன்.
வழிதவறிய குழந்தையிடம்
பரிவுகாட்டும்
பெரியவரைப்போல்
அந்தக்காடுகள்தான்
என்னை அரவணைத்தன.
யாருக்கும் வழிவிடாத
காடுகள்,
தலவனைக்கண்ட
தொண்டரைப்போல்
எனக்குப்
பாதை தந்தன.
என் இளமை முழுதும்
அந்தக் காடுகளிலேயே
கழிந்தது,
பால காண்டம்,
ஆரண்ய காண்டம்
இரண்டுமே எனக்கு
சுந்தர காண்டம்தான்.
யுத்த காண்டமும்
தொடங்கியது.
நான்
தடுக்கப்பட்டேன்.
திருப்பப்பட்டேன்.
திருடப்பட்டேன்.
அழுக்காக்கப்பட்டேன்.
என்னுள் கலந்த
ஓடைகளால்
என் தனித்தன்மை
தன்மானமிழந்தது.
என் இரத்தம்
வயல்களில் வடிக்கப்பட்டதால்
என் ஜீவநாடி
தளர்ந்தது.
இதோ...
என் பயணம்
முடியப்போகிறது.
நான் வந்து சேர்ந்துவிட்டேனா?
என்று
அலைகள் வந்துவந்து
பார்த்துச்செல்கின்றன.
ஒரு நதியின் கடமைகள்
அனைத்தையும்
முடித்தபின்னும்
எனக்குள் ஒரு
வெறுமை.
அதோ...
அந்தக்கடல் பரப்பில்
இந்த வெறுமையும்
நிரம்பிவிடும்.
----------------------------------------------
அன்புடன்,
சிவகுமார்.
-------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக